Search This Blog

February 16, 2009

நான் கடவுள் ! நிஜத்தின் தரிசனம்


கடைசியாக நான்(னும்) கடவுள் பார்த்தாகிவிட்டது.ஏற்கனவே பல பதிவர்கள் படத்தைப் ப்ரேம் பை ப்ரேம் அலசிக்காயப் போட்டுவிட்டதால் என்னைப் பாதித்த,ரசித்த விஷயங்கள் மட்டும் இங்கே....


இளையராஜா...விவரிக்க வார்த்தைகள் இல்லை...டைட்டில் பாடல் மிகவும் அருமை...அதன் அர்த்தங்கள் புரியவில்லை எனினும்,இசையில் மனதை இழுத்துக்கட்டிப்போட்டுவிடுகிறார்....ஓம் சிவஹோம்...நம்மில் உண்டாக்கும் அதிர்வுகள் மெல்லிய மன இழைகளைப் பின்னிப்பிணைத்து ஒவ்வொருமுறைக் கேட்கும்போதும் ஏதோ ஒரு ஏகாந்தமயக்கத்தில் மனதை உள்ளிழுத்துச் சென்று அழுத்திவிடுகிறது. 'பிச்சைப்பாத்திரம்' பாடல்,பாலா அதுவரை திரையில் விஷுவலாகக் காட்டிய நிஜமுகங்களின் சோகத்தை,அந்த ஜீவனை ஒரே பாடலில் தன் இசை சாம்ராஜ்ஜியத்தால் நிருவிவிடுகிறார். பிண்ணனி இசையில் தான் ஒரு சக்ரவர்த்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் ரௌத்ரமும்,வீர்யமும் கலந்த அதிரடி பிண்ணனி இசை,நம்மில் உறங்கிக்கிடக்கும் மிருகத்தை தட்டி எழுப்பி வில்லன்கள் மேல் வன்மம் கொள்ள வைத்து, வில்லன்களை ஆர்யா அடிக்கும் ஒவ்வொரு இடியையும் குரூரத்துடன் ரசிக்கவைக்கிறது.


பூஜா...க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று போதும்...எந்த நடிகைக்கும் இனி எப்போதும் கிடைக்காத வேடம்..பூஜா என்ற நடிகை எந்த ஒரு சீனிலும் தெரியவில்லை...


முருகனாக நடித்த கிருஷ்ணமூர்த்தி...நாயகனைவிட அதிகமாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும்,நடிக்காமல்,முருகனாகவே வாழ்ந்துக்காட்டியிருக்கிறார். திருநங்கையும், இதர நிஜபாத்திரங்களும் தங்கள் வாழ்க்கையை திரையில் காட்சிப் பொருளாக்கியிருக்கிறார்கள்.


ஆர்யா...மூன்றுவருட தவத்தின் பலன்,அடுத்த 30 வருடங்களுக்கு திரையுலகில் நீடித்து நிலைப்பதற்க்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. விக்ரம்,சூர்யாபோல, இந்த அடிதளத்தை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளப்போவதில்தான் உங்கள் வருங்காலம் அமைந்திருக்கிறது.


பாலா...விளிம்புநிலை வாழ்க்கைகளை திரைகாவியங்களாக்கி சமூகத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட மனிதங்களை,இதர மானிடர்களுடன் இணைக்கும் பாலம்.....


நிஜத்தை மூன்று மணிநேரம் தரிசித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்வழியில், கடந்த வாரம் பார்த்த slumdog millionaire படத்திற்க்கு கிடைத்துக்கொண்டிருக்கும் விளம்பரங்களும், விருதுகளும், ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒளிவட்டமும் மனத்திரையில் ஓடியது,என் இதழில் ஒரு இகழ்ச்சிப்புன்னகைத் தோன்றி பல நிமிடங்கள் நீடித்தது.

2 comments:

Vijay said...

\\கடந்த வாரம் பார்த்த slumdog millionaire படத்திற்க்கு கிடைத்துக்கொண்டிருக்கும் விளம்பரங்களும், விருதுகளும், ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒளிவட்டமும் மனத்திரையில் ஓடியது,என் இதழில் ஒரு இகழ்ச்சிப்புன்னகைத் தோன்றி பல நிமிடங்கள் நீடித்தது.\\

You have said that. எனக்கும் இதே ஆதங்கம் ஏற்பட்டது. .ரஹ்மானின் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளும் ஊடகங்கள், இந்தப் படத்தின் ஆணிவேறான பின்னணி இசையை கண்டுகொள்ளாதது, கொடுமை. இதைப் பார்க்கும் போது , தமிழ் சினிமா ஹிந்தி சினிமா போல் தன்னை மார்க்கெடிங்க் செய்து கொள்ளவிlல்லையோ என்ற கேள்வி எழுகிறது. நானும், நான் கடவுள் பற்றி எழுதியிருக்கேன். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

லிங்காபுரம் சிவா said...

\\கடந்த வாரம் பார்த்த slumdog millionaire படத்திற்க்கு கிடைத்துக்கொண்டிருக்கும் விளம்பரங்களும், விருதுகளும், ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒளிவட்டமும் மனத்திரையில் ஓடியது,என் இதழில் ஒரு இகழ்ச்சிப்புன்னகைத் தோன்றி பல நிமிடங்கள் நீடித்தது.\\ That is also good movie, Still this is excellent one. you are 100% right.