Search This Blog

February 12, 2009

நட்பு

முதல் அறிமுகத்திலேயே
மின்னலாய் துளிர்விட்ட
நட்'பூ'...
பூத்து,காய்த்து,
கனிக்கொடுத்து
சுகமான சுமையாய்,
காலமெல்லாம்
களித்திருக்கச் செய்யும்
என்ற நம்பிக்கை ஊற்று,
பு(தை)கைய ஆரம்பித்து
விட்டதற்கு
என்ன காரணம் ?

அளவுக்குமீறிய
எதிர்பார்ப்பா?
காரணமேயில்லாதக்
கோபங்களா?
பிறர் ப(ழி)றித்துவிடுவார்களோ
என்ற பரிதவிப்பா?

நட்பு என்பது
வானவில் அல்ல !
தோன்றி,
களித்து,
கரைந்துபோவதற்கு...

வாழும்வரை
உயிர்மூச்சாக...
பாலைவனப்பாதையில்
தென்றலாக...
எதிர்ப்பவர்களுக்கு
புயலாக...
நட்பு என்பது
காற்றைப்போல !

நம் நட்பு...
வானவில்லா?
தென்றல் காற்றா?

நீயே முடிவு செய்!!!

February 3, 2009

தேசிய நெடுஞ்சாலை NH7

கடந்த டிசம்பரில் ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்வதற்க்காக சென்னை செல்லவேண்டியிருந்தது. கூடவே நண்பனின் குடும்பமும்(பிறந்து ஒரு மாதமே ஆனக் கைக்குழந்தையும்,4 வயதான வாண்டுப்பெண்ணும்) வந்ததால் என்னுடைய காரிலேயே சென்றுவிடுவதென முடிவு செய்தோம்.பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 350கிமீ, முதல்முறையாக இந்தியாவில் நீண்டதூர சாலைவழிப்பயணம்,அதுவும் முழுதூரத்திற்கும் நான் ஒருவனே டிரைவர் வேலைப்பார்க்க வேண்டும்.புதன்கிழமை காலை 730க்கு முன்பு வீட்டிலிருந்துக் கிளம்பினோம்.ஒசூர்வரை பாலம் மற்றும் ரோடு போடும் வேலைகள் நடப்பதால்,35கிமீ கடக்க ஏறக்குறைய 1 மணி நேரம் ஆனது.
தென் திருப்பதி கோயில்-முழுத்தோற்றம்

ஒசூரிலிருந்து சென்னைவரை 4 வழிப்பாதை அமைக்கப்பட்டிருப்பதால் பயணம் இனிதே ஆரம்பித்தது.ஒசூரிலிருந்து சரியாக 10கிமீ தூரத்தில்,ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் தாண்டியவுடன் சாலையின் மறுபக்கத்தில் ஒரு சிறுக்குன்றின்மேல் தென்திருப்பதி என்று ஒரு வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.சிறியக்கோயில் என்றாலும் மிகச்சிறப்பாக கட்டியுள்ளனர்.குன்றின் உச்சியில் கோயில் அமைந்துள்ளதால்,கோயிலின் பின்புற பிரகாரத்தை கடந்து எட்டிப்பார்த்தால் சரேலென சரியும் ஒரு பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென விரிகிறது.பரந்து விரிந்த பச்சை வயல்வெளியும்,அதைக் கட்டி அணைத்ததுப்போல வெகுதூரத்தில் தெரியும் மலைக்குன்றுகளும்,ஒயிலாக இடுப்பசைத்து வெக்கத்துடன் அன்னநடை நடந்து காதலனை நாடிச்செல்லும் இளம் கிராமத்து பெண்பொல வயல்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சலசல என்ற கொலுசு சத்தம் போல கலகலத்து,காலை வெயிலின் தாக்கத்தால் தங்கம்போல தகதகத்து ஓடும் ஓடை நீரும்,அன்னையிடம் பாலருந்தி வயிறு நிறைந்த திருப்தியில்,தெய்வ சிரிப்பு சிரிக்கும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் பரவசநிலைக்கு நம்மை எடுத்துச் செல்லும் மென்மையான தென்றல் காற்றும்,நாம் அங்கு செலவிடும் சில மணித்துளிகளில் நம் வயதை பாதியாகக் குறைத்து,வானத்தில் பறக்கும் ஆகாயவிமானத்தை முதல்முதலில் பார்க்கும் சிறுவனின் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அடுத்தமுறை ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்பவர்கள் தவறாமல் இங்கு ஒரு விசிட் அடியுங்கள்.


தென் திருப்பதி கோயில்-கோபுரம்




பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை சாலையில் வாகன நெரிசல் ஓரளவிற்கு அதிகமாக இருக்கும்.ஏகப்பட்ட லாரிகளை ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கும்.அதுவும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரிவரை மலைப்பாங்கான சாலைகள்.பெரும்பாரம் ஏற்றிய லாரிகள்,ஆமை வேகத்தில் இருவழிகளையும் அடைத்துக்கொண்டு மேடேறுவது காரில் செல்லும் நம்முடைய பொறுமையை பயங்கரமாக சோதித்துவிடும்.கை எப்போதும் கியர் மாற்றுவதிலும், கால்கள் கிளட்ச்,பிரேக்,ஆக்ஸிலேட்டர் என மாறிமாறி சேற்றை மிதிப்பதைப்போல மாற்றிக்கொண்டிருப்பதில் கையும் காலும் ஓய்ந்துப்போகும்.கிருஷ்ணகிரிக்கு ஒர் 10கிமீ'க்கு முன்னால் அடையார் ஆனத்தபவன் உணவகம் உள்ளது.ஒன்றரை மணிநேர கடினப் பயணத்திற்குப்பிறகு சிறிது ஓய்வெடுக்க சிறந்த இடம்.

கிருஷ்ணகிரியைத்தாண்டி வேலூர் செல்லும் சாலையை அடைந்துவிட்டால்,வாகனம் ஓட்டுவதற்கு ஒரு சிறந்த தடமாகிவிடுகிறது.லாரிகள் அனைத்து சேலம் வழியாக தென் தமிழகத்திற்கும்,கேரளாவிற்கும் செல்வதால் வேலூர் சாலை,லாரிகள் அற்ற பாலைவன சோலையாகிவிடும்.சிறு பெரிய ஊர்களின் குறுக்கீடும் புறவழிச்சாலை அமைப்பால் விலகிச்சென்று விடுகிறது. ஆக்ஸிலேட்டரில் வைத்தக்காலை எடுக்கவே தேவையில்லை. குறைந்தப்பட்சம் 120கிமீ வேகத்தில் பறக்கலாம். ஆனால் அமெரிக்காவில் freeway'ல் கார் ஓட்டும் நிம்மதிக் கிடைப்பதில்லை.அதற்கு காரணம், சாலையின் குறுக்கே திடீரென ஓடும் மக்கள், எதிர்புறத்திலிருந்து அடுத்தப்பக்கம் செல்ல,முறையாக அமைக்கப்பட்டுள்ள அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தாமல், நேரத்தையும்,பெட்ரோலையும் மிச்சம் பிடிக்கும் முனைப்புடன்,நாம் செல்லும் அதே திசையில் நேர்எதிரே வண்டி ஓட்டிவரும் இரண்டு சக்கரம்,ஆட்டோ,டிராக்டர்,லாரி, பேருந்துகள் என ஓட்டி வந்து மேலுலகத்திற்கு செல்லும் குறுக்குவழியை காட்டுவார்கள்.ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேகத்தில் ஓட்டுவது நல்லது.

இந்த வழிகளின் சாலை ஓரங்கள்,இன்னும் கான்கிரீட் காடுகளாக மாறவில்லை.ஆகவே பெரும்பாலும் பச்சைபசேலென வயல்வெளிகளும்,மலைமுகடுகளும் பயணத்தை இனிமையாக்குகிறது.இந்தநிலை வேலூர் அடையும் வரைதான்.வேலூரிலிருந்து சென்னைவரை வெயிலூரின் கடுமையான வெப்பத்தால் காய்ந்துப்போய் உள்ளது. இன்னொரு பெரிய குறுக்கீடு ஆடு மாடுகளால் ஏற்படுகிறது.4 வழிப்பாதைகளின் நடுவில் சிறுமரங்களும்,புல்வெளிகளும் வளர்க்கிறார்கள்.அதற்கு நல்ல பராமரிப்பும்,தண்ணீரும் சாலை பணியாளர்களால் கொடுக்கப்படுகிறது. அந்தப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள்,காலையிலேயெ அனைத்து கால்நடைகளுக்கும் சுதந்திரம் வழங்கி சாலையில் விட்டுவிடுகிறார்கள்,அவைகளும் மிகவும் சுதந்திரமாக தேசிய நெடுஞ்சாலையில் நடைப்போட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலைத்தருகிறது.

வேலூர்,வாலாஜாவைத்தாண்டி கார் சென்றுக் கொண்டிருந்தது.ஏற்க்குறைய 70-80கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு 50 அடிதூரத்தில் இடதுபுறமிருந்து ஒரு பசு திடீரென குறுக்கே நடக்க ஆரம்பித்தது. கடைசி சில நொடிகளில் அதைக்கவனித்த நான் வலதுப்புறம் திரும்பலாம் என்றால்,காருக்கு இணையாக ஒரு லாரி வந்துக்கொண்டிருந்தது,வேகத்தையும் முழுஅளவில் குறைக்க முடியவில்லை.பசுவும் கால்வாசி தூரத்தை நான் செல்லும் பாதையில் கடந்துக்கொண்டிருந்தது. வேறுவழியேயில்லை.காரை வலதுப்புறத்தில் லாரியை உரசாத மில்லிமீட்டர் தூரத்திற்கு செலுத்தி, வேகமும் 40கிமிக்கு குறைந்து ஒரு மைக்ரோ மீட்டர் இடைவெளியில் காரின் முன்பகுதி பசுவைக்கடந்திருந்தது.இடதுப்புற முன்பகுதி பசுவைக்கடக்கும் நேரம் 'டமார்'ரென ஒரு சத்தம்,கார் பசுவைகடந்துவிட்டது. ரிவர்வியூ மிர்ரர் வழியாக பார்த்ததில்,பசு எவ்வித பிரச்சனையுமின்றி மறுபக்கத்தை நோக்கி அன்னநடைப் போட்டுக்கொண்டிந்தது. இடதுபுற முன் இருக்கையில் 4 வயது குழந்தையுடன் அமர்ந்திருந்த நண்பனுக்கு எதுவும் ஆகவில்லை.ஏற்றிவிடப்பட்டிருந்த கண்ணாடியும் ஒன்றும் ஆகவில்லை. அப்போது சத்தம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை இடதுப்புறக்கதவின் கீழ்ப்பகுதி முழுவதும் அடிப்பட்டிருக்குமோ...அப்படியென்றால் குறைந்தப்பட்சம் ஒரு பத்தாயிரம் ரூபாய் மொய் எழுதவேண்டியிருக்குமோ என்ற கேள்வியுடன்,ஒரு கிமீ தூரம் கடந்துக் காரை ஓரம் கட்டினோம்.

காரிலிருந்து இறங்கி என்ன ஆனது என ஆராய்ந்தால்,இடதுப்புறக்கதவில் ஒரு சிறுக்கீறல் கூட இல்லை.பிறகுத்தான் கவனித்தோம்,இடதுப்புறம் உள்ள 'ரிவர்வியூ' மிர்ரர் மட்டும் முழுவதுமாக காணாமல் போயிருந்தது.அதுவும் கண்ணாடி மட்டும்தான்.கண்ணாடி ஹோல்டர் ஒன்றும் ஆகவில்லை.ஒரு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்.அதைவிட யாருக்கும் எந்தவித இடருமின்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்த நிம்மதி. பசுக்கடக்கும்போது,அதன் முன்புற வாய்ப்பகுதி மட்டும் கண்ணாடியில் பட்டு,கண்ணாடி தெரித்ததால் அந்த பெரும் சத்தம்.பசுவின் வாய்ப்பகுதி அதனால் அடிப்பட்டதா என தெரியவில்லை.

அதற்குப்பிறகு மிகுந்தகவனத்துடன் ஓட்டி, ஸ்ரீபெரும்புதூருக்கு சில கிமி முன்னால் இன்னொரு உணவகத்தில் ஓய்வுக்காக நிறுத்தினோம்.அங்கிருந்து சென்னைவரை மறுபடியும் லாரிகளும்,நகரப்பேருந்துகளும்,ஆட்டோக்களுமென நெரிசல் அதிகமாகிவிடுகிறது. போதாதகுறைக்கு சுட்டெரிக்கும் மதிய வெயில்.ஒருவாறாக ஐந்தரை மணி நேரத்தில் சென்னை மாநகரை அடைந்தோம்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரும்போது எவ்வித சிறுசம்பவங்களும் இன்றி நல்லப்படியாக அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது,ஒரு நல்ல பயணமாகவே அமைந்தது.சிறந்தமுறையில் அமைக்கப்பட்ட சாலைகள்,பாலங்கள்,நல்ல உணவகங்கள்.ஆனால் சாலைவிதிகளை மதிக்கும் பாங்கு நமக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. அதற்கு சான்று வழிகளில் காணும் சிறு,பெரும் விபத்துகள்.வாகனத்தால் அடிப்பட்டு இறந்துப்பான நாய்களின் உடல்கள் அகற்றப்படாமல்,அதன்மேலே அனைத்து வாகனங்களும் சென்று,அது காய்ந்து சாலையோடு சாலையாக தேய்ந்துபோன தடங்கள். சிவப்புவிளக்கு சுழல வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்கள் என பல நிகழ்வுகள்.

பெங்களூர்-சென்னை வழியில் 5 டோல்கேட்கள் உள்ளன.ஒவ்வொரு இடத்திலும் 25ரூ முதல் 45ரூ வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.ஏற்க்குறைய ரூ 350-400 வரை போய்வர செலவழிக்க வேண்டியுள்ளது.ஆனால் கொடுக்கும் காசுக்கு நல்லமுறையில் சாலைகளை பராமரிக்கிறார்கள்.அந்தவிதத்தில் மகிழ்ச்சியே !

January 14, 2009

படிக்காதவன் : லேட்டஸ்ட் விமர்சனம்

நான் எப்போதும் முதல்நாள்,முதல்காட்சி பார்ப்பதில்லை.அதுவும் பண்டிகைக்காலங்களில் வெளியாகும் படம் என்றால்,கூட்டம்,ரசிகர்களின் கூத்துக்கள்,அநியாய டிக்கெட்விலை,சீட் கிடைக்காமல் ஸ்கீரினுக்கு முன்னாலோ அல்லது ஏதாவதொரு மூலையில் கத்தல்களுக்கும்,வியர்வைக்கசகசப்புகளுக்கும் நடுவில் எவ்வித திருப்தியுமின்றி 3 மணி நேரத்தை கழிப்பது மிகவும் கடிணம்.ஆனால் விதி வலியது.இன்றைய நாளின் சம்பவங்கள் என்னை படிக்காதவன் திரைப்படத்தை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது. படத்தைப் பார்த்துமுடித்தவுடன் உடனடியாக விமர்சனம் எழுத வேண்டும் என்ற உந்துதலால் மடிக்கணிணியை திறந்து தட்ட ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் படத்தின் நாயகன்,நம் அனைவரும் அறிந்த கமர்சியல் கதாநாயகன்.படத்தில் ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான கதை(???),காமெடி,செண்டிமெண்ட்,சண்டை, பஞ்ச் டயலாக்,பாசப்போராட்டம்,பாடல்கள் என கமர்சியல் மசாலாக்களை அடித்து கலக்கியிருக்கிறார்கள்.

படம் கதாநாயகனின் சிறுவயது முதல் ஆரம்பிக்கிறது.பாசமான வக்கீல் அண்ணன்,பள்ளிசெல்லும் இரு தம்பிகள் என ஒரு அருமையான பாசத்தை பிழியும் பாடலுடன் ஆரம்பிக்கிறது.அப்பாடலில் அண்ணன் தீய்ந்துப்போன தோசையை சுட்டுபோடுவதால்,தம்பிகள் நல்ல தோசை சாப்பிட கல்யாணம் செய்துக் கொள்கிறார். தம்பிகளுக்கு தோசை சுட்டுப்போட வேண்டிய அண்ணி,தோசைகரண்டியால் தலையில் போடுவதால் தம்பிகள் இருவரும் வீட்டைவிட்டு சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.

தம்பியின் படிப்பிற்க்காக கதாநாயகன் ஆட்டோ ஓட்டி கஷ்ட்டப்பட்டு படிக்கவைக்கிறார்.வழக்கம்போல நம்பி ஊதாரித்தனமாக செலவழித்து,ஒரு பணக்கார பெண்ணைக் காதலித்து அண்ணனின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துக்கொள்கிறார்.பணக்காரரின் சொத்துக்கு ஆசைப்படும் வில்லன்,அவரைக் கொன்று,பழியை கதாநாயகன் மேல் போட்டுவிடுகிறார்.பெரிய அண்ணன்,இந்த கேப்பில் நீதிபதியாகிவிடுகிறார்.அவரிடம் விசாரணைக்கு வரும் இந்த கேஸின் மூலம்,மீண்டும் தம்பிகளை அடையாளம் தெரிந்துக்கொண்டு,தம்பிகளுக்காக மீண்டும் வக்கீலாக டீப்ரமோட் ஆகி உண்மைகளைக் கண்டுபிடித்து கதாநாயகனை விடுவித்து,அனைவரும் ஒன்றாக தோசை சாப்பிடுகிறார்கள்.
கதாநாயகனின் டாக்ஸிகூட தமிழ் படித்திருக்கிறது.டாக்ஸியில் தவறான எண்ணத்துடன் யாராவது ஏறினால் ஸ்டார்ட் ஆகாது சண்டித்தனம் பண்ணும்.கதாநாயகன் அடிக்கடி டாக்ஸியுடன் பேசிக்கொல்லும் காட்சிகள் நன்றாக படம் பிடித்துள்ளனர். கதாநாயகி கர்ப்பிணி வேசத்தில் கள்ளச்சாராயம் விற்பதும்,கதாநாயகனுடன் மல்லுகட்டும் காட்சிகளும் நகைச்சுவையாக இருக்கிறது.பாடல்களும் கதாநாயகனின் சூப்பர்ஸ்டார் ஆசனத்தை நோக்கிய பயணத்திற்கு பயன்படும் விதத்தில் சிறப்பாக உள்ளது.

நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 'தங்கச்சிய நாய் கட்சிச்சிப்பா......என கலக்குவதும்,பழம் விற்கும் கபாலி,திடீர் பணக்காரராகி கே.பாலி ஆவதும் கலகலப்புடன் படமாக்கப்பட்டுள்ளது.பாடல்கள் அருமையாக வந்துள்ளது. முதல் பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டுள்ளது.தம்பி உதாசினப்படுத்திய வலியோடு,தண்ணீயடித்துவிட்டு,கதாநாயகியை பார்த்துப்பாடும் பாடல்..மிகவும் அருமை.நாயகன் நன்றாக நடித்துள்ளார்.

மொத்தத்தில் படிக்காதவன்...டிஸ்டிங்கனில் பாஸ் ஆகிவிடுவான்...

டிஸ்க்கி : இன்று விடுமுறை என்பதாலும்,அனைத்து தொல்லைக்காட்சிகளிலும் அறுவை ப்ரோக்ராம்கள் என்பதால்,DVD'ல் ரஜினி நடித்த 'படிக்காதவன்' படத்தை பார்த்தேன்.அதன் தாக்கத்தால் உடனடியாக இந்த விமர்சனம்...நீங்கள் வேறு ஏதாவது எதிர்ப்பார்த்து வந்திருந்தால் அதற்கு நான் பொருப்பல்ல..மீண்டும் முதல் வரியைப் படிக்கவும்

December 31, 2008

2008-திரும்பிப்பார்க்கிறேன்...

இன்னுமொரு 365 நாட்கள் வாழ்க்கைப்பாதையில் கடந்திருக்கிறோம்.2008 ஆரம்பித்தபோது,உலகப்பொருளாதாரமும்,வாழ்க்கை தரமும் வளர்ச்சிப்பாதையில் வீறுநடைப்போட்டுக் கொண்டிருந்தது. ஆகையால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையுடனே 2008'ஐ வரவேற்றார்கள். ஆனால் சென்னையில் ஒரு ஓட்டலில் நடந்த விபத்து,புத்தாண்டை உயிர்பலியோடே தொடங்கியது.அடுத்த அடி,ரிலையன்ஸ் IPO வடிவில் இந்தியப் பங்குச்சந்தையை அகலப்பாதாளத்துக்கு தள்ளும் ஆரம்பக்கட்டத்தை ரிப்பன் வெட்டித்திறந்து வைத்தது. அன்று ஆரம்பித்த அடி இன்றுவரை உலக அளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை இடியாப்பச்ச்சிக்கலாக்கி,யாராலும் எப்போது சிக்கல் தீரும் என்று ஜோசியம் சொல்லமுடியாத அளவுக்கு தலையைப் பிய்த்துக்கொண்டு அலைய வைத்துள்ளது. ஒபாமா'வை அமெரிக்காவை ரட்சிக்கவந்துள்ள பரமப்பிதாவாக ஒளிவட்டத்தில் வைத்துள்ளது. 2009தான்,அவர் ஒபாமாவா? ஒசாமாவா? என்பதை தெளிவுப்படுத்தும்.

இந்தியாவில்,முன்பே சொன்னதுபோல்,பங்குச்சந்தையில் ஆரம்பித்த அடி,மத்தியதர மக்களைப் பெருமளவில் பாதித்தது. பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட் பற்றி அ'னா,ஆ'வன்னா கூடத் தெரியாத பெரும்பாலானவர்கள்,உடனடி லாபம் என்ற பேராசைக்கு ஆட்பட்டு,2007-2008'ல் பெருமளவு சேமிப்பை பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட்,நிலம் என எல்லாவற்றிலும் முடக்கினார்கள்.கடந்த சில மாதங்களாக வீசிய பொருளாதார வீழ்ச்சி சுனாமியில் சிக்கி அவர்கள் அனைவரும் இன்று முடங்கிப்போய் இருக்கிறார்கள்.

போதாதக்குறைக்கு, இந்தியாவில் தீவிரவாதமும் 2008'ல் தலைவிரித்து ஆடியது.2 மாதங்களுக்கு ஒருமுறை பல நகரங்களில் குண்டுவெடிப்பு என ஆரம்பித்து,அண்மையில் மும்பை சம்பவம் வரை பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. வழக்கம்போல,அமெரிக்க நாட்டாமையின் விரலசைவுக்கு ஆடும் பொம்மைகளாக முதுகெலும்பற்ற இந்திய,பாகிஸ்தான் அரசுகள் போர் பூச்சாண்டிக் காட்டி ஆடிக்கொண்டிருக்கிறது. அணு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காட்டிய உறுதியில்,ஒருஅணுக்கூட தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் காட்டவில்லை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால்,குடும்பப்பிரச்சனைகள்,சேனல் போட்டிகள்,கூட்டணி குஸ்திகள் என தமிழக அரசு படு பிஸியாக இருந்தது. ஆற்க்காட்டார் புண்ணியத்தில், தமிழகக்குடும்பங்களுக்கு கரண்ட் பில் குறைந்ததால்,கணிசமான அளவில் பணத்தை சேமிக்க முடிந்தது. சேமித்தப்பணத்தை ஒரு ரூபாய் அரிசி வாங்கி,குடும்பத்துடன் அமர்ந்து நிலாச்சோறுண்டு 'கற்க்கால' ஆட்சியின் மகிமையை 'மானாட மயிலாட' இலவச தொலைக்காட்சிப்பெட்டி மூலமாக அனுபவித்தது.எதிரிக்கட்சி தலைவர் 'மலைஏறி' அங்கிருந்து நாளொரு போராட்டமும்,பொழுதொரு அறிக்கையுமாக ரிமோட் அரசியல் நடத்தினார். அதற்கும் சளைக்காமல் தமிழக முதல்வரும் பதில் அறிக்கையும், சாதனைப்பட்டியலையும் பக்கம்பக்கமாக தயாரித்து நியுஸ் சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் சரியான தீனியளித்தார்கள்.அறிக்கைகள் தயாரிக்க செலவிட்ட நேரம் தவிர, கிடைத்த சொற்ப நேரத்தில் திரைப்படங்கள் பார்ப்பதிலும், விழாக்களில் குத்து ஆட்டங்களைக் கண்டுகளிப்பதிலும், திரைக்கதை வசனம் எழுதி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏதாவதொரு நிவாரண நிதியளித்தும் மக்களுக்கு இந்த தள்ளாத வயதிலும் தொண்டாற்றினார்.

மக்கள் தொடர்பு சாதனங்களான சேனல்களும்,பத்திரிக்கைகளும் தங்கள் வானளாவிய சுதந்திரத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் நிகழ்ந்த விஷயங்களை சுடச்சுட மக்களுக்கு வழங்கி மக்களின் அறிவுப்பசியைப் போக்கினார்கள். தமிழக வாரப்பத்திரிக்கைகள் மாதம் இருமுறை ரஜினியை அட்டைப்படத்தில் போட்டு கவர்ஸ்டோரிகளாக எழுதித்தள்ளினார்கள்.அவர்கள் சொன்னக்கதைகளின்படி,2008'ல் மட்டும் குறைந்தப்பட்சம் 100 முறையாவது ரஜினி புதுக்கட்சி ஆரம்பிக்க நாள் குறித்தார். ஆளும்கட்சியின் குடும்பகுஸ்தியும் வாராவாரம் செய்திசுரங்கத்தை பத்திரிக்கைகளுக்கு வாரிவழங்கியது. ஆன்டி க்ளைமாஸாக 'குருப்பெயர்ச்சி'க்குமுன் திராவிடப்பாரம்பரியத்தில் ஊறித்திளைத்தக்குடும்பம் பாசக்கிளிகளாய் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்து, 2009'ல் அனைத்து வாரப்பத்திரிக்கைகளுக்கும் 'செய்திப்பஞ்சத்தை' ஏற்ப்படுத்திவிட்டனர். இவைகள் போதாதென்று மாதத்திற்கு ஒருமுறை IT துறையினர் தமிழகக் கலாசாரத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களென,'டேட்டியோ' போன்ற உன்னத கலாச்சாரம் பற்றிய செய்திகளைச் சுடச்சுட வாரிவழங்கி பத்திரிக்கைகளின் 'கலாச்சாரக் காவலன்' என்ற வேடத்தை திறம்பட செய்தனர்.

விளையாட்டுத்துறைக்கு 2008 நல்ல ஆண்டாகவே அமைந்தது. செஸ்'சில் கிங்'கென விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். கிரிக்கெட்'டில் தோனிக்கு லட்சுமி(ராய்)கடாட்சம்.அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. குறிப்பிடத்தக்க பெரும்வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதப்பட்டது.

விண்வெளி விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனையாக 'சந்திராயன்' விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவின் மூளைப்பலத்தை உலகத்துக்கு உணர்த்தியது.

திரைத்துறையில் 2008'ல் வெளிவந்த 90% மேற்ப்பட்டப்படங்கள் தோல்வியைத்தழுவி, தயாரிப்புக்களத்தில் குதித்த கார்ப்பரேட் நிறுவனங்களை தள்ளாட்டத்தில் தள்ளிவிட்டது. நம்பிக்கைக்கீற்றாக 'சுப்ரமணியபுரம்,பூ' போன்ற படங்கள் வெளிவந்தன.

ஒட்டுமொத்தமாகப் பார்ந்தால் 2008,நம்பிக்கையுடன் ஆரம்பித்து, அனைத்துவகைகளிலும் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இன்றைய சூழ்நிலை, பொருளாதார சிக்கலிலும், ஸ்திரமற்ற வலுவில்லாத அரசையும், அரசியல் தலைவர்களையும் வைத்துக்கொண்டு, தீவிரவாதம், வன்முறை, பேராசை,சுயநலம்,லஞ்சம், அட்டூழியம், அதிகாரப்போதை போன்றவற்றை அதிகப்படுத்தி,2009'ஐ ஒரு நிச்சயமற்ற, இருண்ட ஆண்டாக எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் வைத்துள்ளது.

இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் தேவையானது, சுயப்பரிசோதனை. இந்த நிச்சயமற்ற சூழ்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் முக்கியமான காரணம். சூழ்நிலையை ஆராய்ந்து, ஒருமுகப்பட்ட சிந்தனையுடனும், உறுதியுடனும்,பொதுநல நோக்குடன் அனைவரும் இணைந்து செயலாற்றினால்,சோதனைகள் நிறைந்த 2009,சாதனைகள் நிகழ்த்தும் சாகசக்களமாய் பரிமளிக்கவைக்கலாம்,என்ற நம்பிக்கையுடன் 2009'ஐ எதிர்க்கொள்வோம்.

அனைவருக்கும் 2009 நன்நம்பிக்கைமுனையாக,சாதனைகள் பல நிகழ்த்தும் ஆண்டாக அமைய வாழ்த்து(க்)கள்.

December 8, 2008

வாரணம் ஆயிரம் - லேட்டஸ்ட் விமர்சனம்

சூர்யா,சிம்ரன்,ரம்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா, சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,
சூர்யா,சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,
சூர்யா, சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி,சூர்யா,
சமீராரெட்டி, சூர்யா,சிம்ரன், சூர்யா,சமீராரெட்டி,
சூர்யா, சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி, சூர்யா,
சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி,
சூர்யா,சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி

இடைவேளை....

சூர்யா,சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா,
சூர்யா, சிம்ரன்,சூர்யா,சூர்யா, சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,
சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,
சூர்யா,சூர்யா,ரம்யா, சூர்யா,சிம்ரன்,
சூர்யா,சூர்யா,ரம்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,
ரம்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,ரம்யா, சூர்யா,
சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சூர்யா, சூர்யா,ரம்யா, சிம்ரன்,சூர்யா,ரம்யா,
சிம்ரன், சூர்யா,சூர்யா

முடிவு...வணக்கம்.

படம் பார்த்தவர்கள்

காந்தி:உனது பிறந்தநாள் இன்று....

காந்தி(அ)அரவிந்தன்...

இன்று உனது பிறந்தநாள். வழக்கம்போல அலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லத்தான் நினைத்தேன்.ஆனால் மனதில் நினைப்பதை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொல்லிவிட முடிவதில்லை. மேலும் அலைப்பேசியில் பேசுவதென்பது உனக்கு வேப்பங்காய்,அதனால்தான் இந்தக்கடிதம்.

எப்போது ஆரம்பித்தது நம் நட்பு ???

14 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டின் ஐந்தாவது செமஸ்டர். சுதாவும்,செல்வாவும் நீ எலக்ட்ரானிக்ஸ் லேபில் இருப்பதாகவும்,உன்னை அழைத்துக்கொண்டு ரூமிற்கு செல்லலாம் என முடிவு செய்து உனக்காக லேப் வாசலில் காத்திருந்தோம்.சிறிது நேரக் காத்திருப்புக்குப்பின், ஒரு ஒல்லியான உருவம்,முகத்தைவிட பெரிய(???)கண்ணாடியை மாட்டிக்கொண்டு, பெருத்த சிந்தனையுடன் ஒரு 'விஞ்ஞானி'க்குரிய (அசட்டுக்)'களை'யோடு வெளியே வந்தது. இதுதான் அரவிந்தன்,எங்க ஊர்க்காரன்..என செல்வா அறிமுகப்படுத்தி வைத்தான்.அன்று நாம் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை.அடுத்ததாக ராம்குமாரின் பிறந்தநாள் பார்ட்டியில்(அமைதியான ஓடையாய் ஓடிக்கொண்டிருக்கும் உன் இன்றையக் குடும்ப வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அன்று என்ன நடந்தது என்று விவரமாக எழுதாமல் விடுகிறேன்) உன்னுடைய முகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன்.

ஹாஸ்டலைவிட்டு நீயும் வெளியில் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தப்பின், அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். அந்த சந்தர்ப்பத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. நம் நண்பர்கள் அனைவரும் மேல்மாடியில் உள்ள அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மாலை மங்கும் நேரம்.இருள் மெதுவாக கவியத்தொடங்கியது. அறையில் எரிந்துக்கொண்டிருந்த விளக்கு கரண்ட் கட்'டால் அணைந்துவிட்டது.உடனே,நீ எழுந்து,கீழேப்போய் மெழுகுவர்த்தி ஏற்றி வருவதாய் சொல்லிச்சென்றாய்...நீ இறங்கிச் சென்ற சில நிமிடங்களில் கரண்ட் வந்துவிட்டது.ஆனால் உன்னைக்காணவில்லை. நீ என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் எனப்பார்க்க செல்வா கீழே வந்தான். நீயோ தீவிரமாக மெழுகுவர்த்தி தேடிக்கொண்டிருந்தாய்.நீ அறியாமல்,செல்வா அந்த அறையின் விளக்கை போட்டுவிட்டு ஒளிந்துக்கொண்டான். நீயும் மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து,அதை கொளுத்திக்கொண்டு,அந்த அறையின் மின்விளக்கை அணைத்துவிட்டு, மேல்மாடிக்கு வரும்வழியில்,இருட்டாக இருந்ததால்,அதற்கான மின்விளக்கையும் போட்டுவிட்டு, மெழுகுவர்த்தி காற்றில் அணையாமலிருக்க கையால் மூடிக்கொண்டு மாடியில் உள்ள அறைக்கு வந்து மெழுகுவர்த்தியை வைத்தாய்.நாங்கள் அனைவரும் உன்னுடைய கடமை உணர்ச்சியையும்,எடுத்தக்காரியத்தில் எவ்வித இடர்வந்தாலும், காரியத்தில் கண்ணாக,சுற்றி என்ன நடந்தாலும் கவலைப்படாமல் எடுத்தவேலையை முடிக்கும் ஒரு வல்லவனாகத்தான் உன்னைக் கருதினோம். ஆனால் அதன்பிறகுதான் கவனித்தோம்...நீ கண்ணாடிப் போட்டுக்கொள்ள மறந்துப்போனதை...

ஹாஸ்டலில் இருந்தவரை கடமை,கண்ணியம் கட்டுப்பாடு என சீரிய வாழ்க்கை வாழ்ந்து,ஆஸ்டல் மக்கள் அனைவராலும் "காந்தி' என அழைக்கப்பட்ட நீ....ஆஸ்டலைவிட்டு, வெளியே ரூம் எடுத்து தங்க ஆரம்பித்த சிறிது காலத்திலேயே.....மடமை, தண்ணி'யம், (காசுக்கு)தட்டுப்பாடு என மாறிப்போய் ஒரு பேப்பரில் அரியர்ஸ் வைக்கும் அளவுக்கு போனதற்கு என்னக் காரணம் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

கல்லூரி நாட்களுக்குப்பிறகு,நம் கல்லூரியிலேயே சில மாதங்கள் நாம் வேலைப்பார்த்த,அந்த சமயத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகம் (ரொமான்டிக் லுக்????) வெளிப்பட்டது. மைக்ரோப்ராசசர் லேபில் '...மா'வுக்காவே நீ போவதும், மச்சான்... எவ்...வ்...வ்வ்....ளோ சாப்ப்ப்ப்ப்ப்ப்'டா இருக்கா என உருகியதும், அவளுக்கு(மட்டும்) ப்ராக்டிக்கலில் மார்க் அள்ளிவழங்கியதும், நாம் மதியம் சாப்பிடும் மெஸ் ஓனரின் பெண்,உன்னை மயக்க செய்த லீலைகளும்,அதில் நீ விழாமல் சுதா எடுத்த அதிரடி நடவடிக்கைகளும் என நாட்கள் உருண்டோடியது.

அதற்குப்பிறகு பேங்களூர் வந்து நீ,நான்,அருண் மூவரும் வேலைத்தேட ஆரம்பித்த மூன்றாம் மாதத்தில் ஒவ்வொருவராக வேலைக்கிடைத்தப்பின், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வாழ்ந்த அந்த 4 வருடங்கள் எவ்விதக் கவலையும் இன்றி,வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோம் என்ற தன்னம்பிக்கையில் இறுமாந்து இருந்த அந்த நாட்கள்,நம் அனைவருக்கும் வசந்தக்காலம்.அந்த வசந்தக்காலத்தில்தான், நம்மிடையேயான நட்பு மேலும் வளர்ந்து மணம்வீச ஆரம்பித்தது.

ஒரு மழைநாளிரவில், உன் அலுவலகத்திலிருந்து,வீடுவரை ஏறக்குறைய 6-7 கிமீ தூரத்திற்கு உன்னையும்,உன் இருசக்கரவாகனத்தையும் அப்துல் சமது தள்ளிக்கொண்டு வந்ததும்,அதனால் அவனுக்கு ஏற்பட்ட ரத்தக் கொதிப்புக்கு அவன் இன்றுவரை மாத்திரை சாப்பிட்டு வருவதும்,

ஓரிரவு,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, உனக்கும், செல்வாவிற்கும் ஏற்ப்பட்ட சண்டையில் நீ கோபப்பட்டு எடுத்து எறிந்த சாம்பார் பாக்கெட்,செல்வா முகத்தில் படாமல் சுவற்றில் பட்டு தெறித்ததில் அரண்டுப்போன செல்வா,இன்றுவரை,சாம்பார் என்றாலே அலறிஅடித்துக்கொண்டு ஓடுவதும்,

காலையில் நாங்களெல்லாம் அலுவலகத்திற்கு கிளம்பிப் போனப்பின்பு, நீ தூங்கி எழுந்து பாத்ரூமில் நுழையும்போது,அதற்க்காகவே காத்திருந்து உன்னைத் தள்ளிவிட்டுவிட்டு சுதா பாத்ரூமிற்கு செல்வதும்,வாய்க்கூடக் கழுவாமல்,மணக்க..மணக்க 'சுத்தச் செந்தமிழில்' அவனுக்கு நீ அர்ச்சனைச் செய்ததும்....

குளிக்க பாத்ரூம் சென்று,என்ன தலைப்போகிற வேலை என்றாலும், குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்திற்கு குளிப்பதும்...அப்படிக் குளித்துக்கொண்டிருக்கும்போது...திடீரென...'.............ஷூஊஊஊஊ' என நீ ஊளையிடுவதும்...

சந்திரமுகி படம் பார்க்கலாமென முடிவு செய்து,உன் குடும்பத்தினர்,நம் நண்பர்களென அனைவரும் PVR'க்கு வந்ததும், நீயும் உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் ரஜினி படம் முதல் வாரத்திலேயே பார்க்கப்போவதாக பெரிய பில்டப் கொடுத்துவிட்டு, அலுவலகத்திலிருந்து நேராக PVR வந்து, நேரடியாக மூன்றாம் மாடியில் உள்ள திரையரங்குக்கு வராமல், Forum' மாலின்,வெளிவாயிலிலேயே நீ 'தேவுடு' காத்துக்கொண்டு இருப்பது தெரியாமல், நாங்களெல்லாம் உனக்கு காத்திருந்து வெறுத்துப்போய், 'தேவுடா...தேவுடா...ஏழுமலை தேவுடா....' பாடல் ஆரம்பித்தவுடன் உள்ளே சென்று படத்தில் ஆழ்ந்துவிட்டதும், அதற்குப்பிறகு 1 மணி நேரம் கழித்து,உன் ஏழாவது அறிவு(????) வேலைச்செய்து,மேலே வந்து அரைக்குறையாக படம் பார்த்ததும்.....

எத்தனை எத்தனை நிகழ்வுகள் நாம் நண்பர்களாக சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தப்பின் !!!...சென்ற பயணங்கள், ரசித்தக் காட்சிகள்,சிரித்த சிரிப்புகள்,விவாதித்த விஷயங்கள், சிந்திய கண்ணீர் துளிகள், எடுத்த சபதங்கள், சந்தித்த தோல்விகள், பெற்ற வெற்றிகள், கிடைத்த சொந்தங்கள்,குழந்தைச் செல்வங்கள்,பார்த்த சினிமாக்கள்,சென்ற சுற்றுலாக்கள்...முடிவேயில்லை இதற்கு....

நம் 14 ஆண்டுக்கால நட்பில் உன்னுடைய பல முகங்களைப் பார்த்துவிட்டேன்.ஆனால் நீ அடிக்கடி இன்னும் ஒரு முகத்தைக் காட்டுவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்....அதை எப்போதுதான் காண்பிப்பதாக உத்தேசம்... அட்லீஸ்ட்...அடுத்த பிறந்தநாளுக்குள் அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், அடுத்தவருடப் பதிவில் எழுத வசதியாக இருக்கும்.

உன்னிடம் எனக்குப் பிடித்ததே, ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டு, மாட்டிக்கொண்டவுடன் ஒரு அசட்டு(க்களையுடன்)சிரிப்பு சிரிப்பாயே..அந்த சிரிப்புதான்... இன்றையநாள்வரை உன்னை ஏதாவதொரு வம்பில் மாட்டிவிட்டு உன்னுடைய செய்கைகளை ரசிப்பதற்கான காரணம்.

நம் நீண்ட நட்புப்பயணத்தில், உன்னிடம் பார்த்து வியந்த பலவிஷயங்களில் என்னால் மறக்கமுடியாதது...உன்னுடைய நியாபகசக்தியும்,காலம் தவறாமையும்,எதையும் ப்ளான் செய்து,அதில் சிறிதும் பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் திறமையும்...சத்தியமாக சொல்கிறேன்...நம் நண்பர்களில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமாகாது..


நம் மனப்பதிவுகளில் உள்ள எல்லாவற்றையும் எழுத இந்த ஒருப்பதிவு போதாது...ஆகவே...இந்த இனிய நாளில் எல்லா வளங்களையும் பெற்று,சிறந்த உடல்நலத்துடன்,சீரும் சிறப்புமாக பலப்பல ஆண்டுகள் வாழ என்
வாழ்த்து(க்)கள்

டிஸ்கி : இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள்,சுவாரசியத்திற்க்காக கூட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே யாரும் அரவிந்தனை குறைத்து எடைப்போட வேண்டாம்....உண்மையில் அரவிந்தன் ஒரு அப்பாவி (அடப்பாவி...........இதெல்லாம் ரொம்ப ஓவரு)

November 17, 2008

இதுதான்டா வாழ்க்கை.......

வாழ்க்கை என்பதை காற்றில் ஐந்து பந்துகளைத் தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டாக கருதிக்கொள்வோம்.ஒவ்வொருப் பந்துக்கும் ஒரு பெயரும் வைப்போம்.







முதல் பந்து : வேலை


இரண்டாம் பந்து : குடும்பம்


மூன்றாம் பந்து : உடல்நலம்


நான்காம் பந்து : நண்பர்கள்


ஐந்தாம் பந்து : உத்வேகம்/தன்னம்பிக்கை



இப்போது அனைத்துப் பந்துகளும் காற்றில் உள்ளது. வாழ்க்கை எனும் விளையாட்டை விளையாடும்போது முதல் பந்தான வேலை என்பது ரப்பர் பந்து போன்றது.தவறவிட்டாலும், மீண்டும் கைக்கு வந்துவிடும் எந்தவித சேதாரமும் இன்றி.



ஆனால் இதரப் பந்துகளான குடும்பம்,உடல்நலம், நண்பர்கள்,உத்வேகம் போன்றவை கண்ணாடி பந்துகள் போன்றது.ஒரே ஒருதடவை ஏதாவது ஒரு பந்தைத் தவறவிட்டாலும் அது அடிப்பட்டுவிடும்.மீண்டும் பழைய நிலையை அடையவே முடியாது.



ஆகவே இதனால் அறியப்படும் நீதி யாதெனில்.....

மீண்டும் முதல் வரியிலிருந்து படிக்கவும்.....

---- எங்கேயோ படித்தது....