Search This Blog

September 10, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - விமர்சனம்



கதை என்ற ஒன்று பெரிதாக இல்லாமல் இரண்டேமுக்கால் மணி நேரம் ஒரு படத்தை முழுதாக பார்க்கவைக்கமுடியுமா ? என்ற சவாலில் டுடோரியலில் சென்று படித்து first class'ல் பாஸ் பண்ணியிருக்கும் படம்தான் பாஸ் (எ) பாஸ்கரன்...

கதை என்ன என்று சொல்லவேண்டுமென்றால்..... இம்ம்.....ம்...ம்ம்...... ஓகே.... ஒகே....ஓகே.... ஏகப்பட்ட அரியர் வைத்துவிட்டு, 5 வருடங்களாக பரிட்சை எழுதி பாஸ் பண்ண சீரியசாக டிரை'கூட பண்ணாத, பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்றுக் கேட்கும் ஹீரோ, தான் போட்ட சபதத்தில் ஜெயிக்க (வேறு என்ன...தங்கச்சிக்கு ஆறே மாதத்தில் கல்யாணம், அடுத்தபடியாக காதலியை கைப்பிடிக்கும் லட்சியம்) நண்பனின் உதவியுடன் டுடோரியல் ஆரம்பித்து, அதில் சேரும் சில/பலரை 10வது பாஸ் செய்யவைத்து சபதத்தை நிறைவேற்றுகிறார்...(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......அப்பாடா...... கதைய சொல்லிட்டேன்...).

ஆர்யா,பொறுப்பில்லாத பையனாக,அப்பா இல்லாத குடும்பத்தில், மாட்டாஸ்பத்திரியில் டாக்டராக இருக்கும் கல்யாணமாகாத அண்ணன் சம்பாத்தியத்தில், டிவி காம்பயர் போல எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் தங்கை, பையன் பிட் அடித்தாவது பாஸ் பண்ணவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் அம்மா என்ற குடும்பத்தில் இருக்கிறார்.அவருக்கு மாமனார் காசில் சலூன் கடை(தல தளபதி சலூன் கடை) வைத்திருக்கும் சந்தானம் ஒரேஏஏஏஏஏஏஏஏஏ நண்பன்டாஆஆஆஆஆஆ............

ஒருமுறை அரியர் எழுத ஏராளமான பிட்'களோடு செல்லும்போது பஸ்சில் நயனதாராவை சந்திக்கிறார்.அவரிடம் பிட் அடித்து எக்ஸாம் எழுத போவதாக சொல்கிறார். அடுத்து என்ன சீன் வரும்????? கரெக்ட்.அதேதான்... எக்ஸாம் ஹாலில் எக்ஸாமினர் நயனதாராவேதான். அடுத்து கல்யாணமாகாத அண்ணனுக்கு அவர் விரும்பும் விஜயலட்சுமியை அவர் வீட்டுக்கு அம்மாவுடன் சென்று பேசி முடித்துவிட்டு வெளியே வரும்போது.......யார் வருவாங்க????? ஹீரோயினேதான்... அவருக்கு அங்கு என்ன வேலை???? என்னங்க சார்...எவ்ளோ..............படம்பார்த்திருக்கிறோம்,இதுகூட தெரியாதா? அவர்தான் விஜயலட்சுமியோட தங்கச்சி.... அப்புறம் என்ன நடக்கும்??? அதே....அதேஏஏஏஏஏஏஏதான்....அண்ணன் கல்யாணத்தின்போது ஹீரோ,ஹீரோயினை சுற்றி...சுற்றி வந்து பாட்டு பாடுவார்...ஹீரோயினும் அவரை பிடிக்காததுப்போல் காட்டிக்கொண்டு,அவர் செய்யும் சேட்டைகளையெல்லாம் ரசித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு நண்பனின் உதவியோடு ஹீரோயினுக்கு அவரின் காதலை தெரிவிக்க முயற்சிப்பார். பஞ்சாயத்துக்கு ஹீரோவின் அண்ணி வந்து, 'வேலைவெட்டியில்லாமல் சுற்றும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கு என் தங்கையை கல்யாணம் செஞ்சிக்க' என்று சூடுபறக்க கேட்க,ரோசப்படும் ஹீரோ வீட்டைவிட்டு வெளியேறி நண்பனின் தலையை(???) அடகு வைத்து, சபதத்தில் கடைசியில் ஜெயிக்கிறார்.

படத்தின் நிஜ ஹீரோ சந்தானம்தான். அவர் வரும் காட்சிகளெல்லாம் காமெடி களைக் கட்டுகிறது. 'நான் கடவுள்' வில்லனிடம், ஆர்யா+சந்தானம் கூட்டணி டுடோரியல் காலேஜ் நடத்த கடன் கேட்க ,அவரின் பையனையும் 10 பாஸ் பண்ண வைக்கவேண்டும் என்ற படா கண்டிஷனோடு கடன் கொடுக்கிறார்.
டுடோரியலில் ஆள் சேர்க்க போஸ்டர் அடித்து ஒட்டி, ஷகிலாவை பாடம் நடத்த வைத்து என சில,பல டகால்டி வேலைகள் என சந்தானத்தின் காமெடி கல்லா கட்டுகிறது. ஒவ்வொரு வசனத்திற்கும்,'கவுண்டர்' அட்டாக் கொடுக்கும் சந்தானத்தின் காமெடிக்கு தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.
முதல் மூன்று பாடல்கள் நன்றாக இருக்கிறது.யுவனின் இசை சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில்தான் முதல்முறை பாடல்களைக் கேட்டேன்/பார்த்தேன். தேவையில்லாத இடத்தில் கடைசிபாடல் படத்தின் வேகத்தடையாக உள்ளது.

SMS இயக்குனரின் கைவண்ணத்தில் அவருக்கு அடுத்த வெற்றிகரமான படம்.கும்பகோணத்தை மையமாக வைத்து 4 துணை,4 இணை இயக்குனர்களோடு சேர்த்து படம் பண்ணியிருக்கிறார். முதல் பாடலின் பிண்ணணியில் 'விண்ணைதாண்டி வருவாயா' போஸ்டரின் முன்பு ஹீரோ நடனமாடுவதாக காட்சி வருகிறது. அதற்கு வெகுபின்பு வரும் வேறொரு காட்சியில், ஆர்யாவும்,சந்தானமும், 'ஏகன்'+ ' வில்லு' பட ரிலீசன்று படம் பார்க்க செல்வதாக வருகிறது..

முதல்பாதி மிகவும் மெதுவாக போகிறது,சந்தானம் வரும் இடங்களைத்தவிர. இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு பரவாயில்லை. சிலக்காட்சிகளுக்கு சந்தானத்திடமிருந்த 'கத்தரி' யை பயன் படுத்தியிருக்கலாம். க்ளைமாக்ஸில் படத்தை முடித்து வைக்க, 'சிவா' வருகிறார்.

ஐய்யய்யோ... நயனதாராவை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். 'யாரடி நீ மோகினி' லுக்கில் கொஞ்சம் வயதானவராக வற்றிப்போய் இருக்கிறார்.not bad.

Boss (a) Baskaran : Good Time pass.

March 3, 2010

'விண்ணைத்தாண்டி வருவாயா?

Will you cross the skies for me? காதலில் உருகிய,காதலை இறுக்கிய,காதல் கருகிய,காதலில் மருகிய பலப்பல நெஞ்சங்களின் வலித்துடிப்பை ஒளிவடிவமாக்கியுள்ள திரைக்காதல்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?

வாழ்க்கைப்பாதையில் காதல் என்ற அத்தியாயத்தை ப(பி)டிக்காமல் கடந்தவர்கள் வெகு சிலர்தான்.நம்மில் பலர் வாழ்வின் ஏதாவதொரு கணத்தில் நாமும் காதலிக்கப்படுவோமா?, காதல் சூறாவளி நெஞ்சக்கடலில் மையம் கொள்ளுமா என்று ஏங்கியவர்கள்தான்.அந்த ஏக்கத்தையும், ஏற்படும் வலிகளையும்,எதிர்க்கொள்ளும் புயல்களையும்,இதமாய் கொல்லும் இன்பகணங்களையும்,தோற்றுப்போனால் ஏற்படுத்தும் மரண இம்சைகளையும் கலந்துக்கட்டி இரண்டுமணி நேரத்தில் நம்வாழ்வில் கடந்த காதல்க(ன)ணங்களை கலைத்துப்போடும் படம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா?


கார்த்திக்,ஜெஸ்ஸி என்ற இருதுருவங்கள் ஏதோ ஒரு நொடியில் காதல் என்ற காந்தசக்தியால் ஈர்க்கப்பட்டு, சேரவும் முடியாமல்,பிரியவும் முடியாமல் காதலை களையாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தில் தொலைந்து போகிறார்கள்.கார்த்திக்காக சிம்பு - படம்முழுக்க 'விரல்வித்தைக்' காட்டி நடிக்காமல்,நடித்திருக்கும் முதல்படம்.ஜெஸ்ஸியாக திரிஷா - கார்த்திக்கைவிட ஒரு வயது மூத்தவர் என்ற தொற்றத்துடன், காதல் வயப்படும் மேல்-மத்தியவர்க்கப் பெண்களுக்கேயுரிய குடும்பமா? காதலனா? என்ற குழப்பத்துடன் வளையவருகிறார். படத்தின் பெரும்பகுதியை இவ்விருவருமே ஆக்ரமித்துக்கொள்வதால்,இவர்கள் பேசும் வசனங்களே படத்தை நகர்த்தி செல்வது இரண்டாம் பாதியில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இடங்களை ரஹ்மானின் இசையும்,தாமரையின் வரிகளும் நிரப்பிவிடுகின்றன.

காதலை அனுபவித்து,அந்த அனுபவம் தந்த துயர்களையும்,கவிதையையும்,வலியையும் கலந்து வசனங்கள் எழுதுப்பட்டுள்ளன.இக்கதைக்கு சிம்பு சரியான செலக்ஷன்.சிம்புவின் காதல்களும்,அதன் தோல்விகளும் அனைவருக்கும் தெரியும்.அது வெகுவாக இந்த திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியுள்ளது.

இம்மாதிரியான திரைப்படங்களுக்கு இசையும்,பாடல் வரிகளும் மிகவும் முக்கியம்.அந்த எதிர்ப்பார்ப்பை,உணர்வை சரியான வகையில் ரகுமானின் இசையும்,தாமரையின் பாடல் வரிகளும் வெளிப்படுத்தியுள்ளது.கேமிராமேனின் கைவண்ணம் படத்திற்கு ஒரு 'ரிச் லுக்' தருகிறது.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு...

மொத்தத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா? ',காதல் என்ற பெரும்கடற்புயலில் சிக்கி சிதறுண்டு போனவர்களின் உள்காயங்களையும்,அதில் வெற்றிகரமாக பயணித்து கரைச்சேர்ந்தவர்கள் சந்தித்த சோதனைகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளது...




'விண்ணைத்தாண்டி வருவாயா? - வந்தால் உன்னைச் சரணடைவேன்....